மருந்து உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு விருப்பம்- சுகாதாரத்துறை மந்திரி


மருந்து உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு விருப்பம்- சுகாதாரத்துறை மந்திரி
x

ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அவர் கூறியுள்ளதாவது:

இந்த மையம் 21 ஆம் நூற்றாண்டில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவாக தரமான சேவைகளை வழங்குவதன் மூலம், நாட்டின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர். வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு 5-10 ஆண்டுகள் வரை ஆகும் போது, இந்தியா தடுப்பூசிகளை ஒரு வருட காலத்திற்குள் தயாரித்தது. தற்போது உலகில் தயாரிக்கப்படும் நான்கு மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

எனவே, இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story