அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்


அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்
x

பதவியேற்கும்போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமரை தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்குள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள். பதவியேற்பின் போது அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே தான் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடி நாங்கள் வந்துள்ளோம். பதவியேற்கும்போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம். இந்திய அரசியலமைப்பை எந்த அதிகார சக்திகளாலும் தொட முடியாது" என்றார்.


Next Story