துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு ரூ.1 கோடி பரிசு - மராட்டிய அரசு அறிவிப்பு


துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு ரூ.1 கோடி பரிசு - மராட்டிய அரசு அறிவிப்பு
x

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார்.

மும்பை,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "இந்த பதக்கம் மராட்டியத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியம் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறினார்.


Next Story