அரியானா: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சிசுவை கவ்விச் சென்று கடித்துக்கொன்ற தெருநாய்....!


அரியானா: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சிசுவை கவ்விச் சென்று கடித்துக்கொன்ற தெருநாய்....!
x

அரியானாவில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது.

சண்டிகார்,

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி, அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்ந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு, அந்த சிசுவுடன் அதன் பாட்டி, ஆஸ்பத்திரியில் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது. அதை யாருமே கவனிக்கவில்லை. இந்நிலையில் கண்விழித்த பாட்டி, குழந்தையைக் காணாமல் பதறி மற்றவர்களை உஷார்படுத்தினார்.

ஆஸ்பத்திரி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிசுவை தெருநாய் கவ்விச் சென்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வெளியே தேடியபோது, நாயால் கடித்துக் குதறப்பட்ட சிசு இறந்துகிடந்தது. நெஞ்சைப் பதறவைக்கும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story