ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்: முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை


ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்: முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
x

நகைக்கடையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் கடந்த 1ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் கடை உரிமையாளரை மிரட்டி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சதேந்திர பல் என்பவரை போலீசார் நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம் முக்சர் பகுதியை சேர்ந்த சதேந்திர பல் ஹரித்வாரின் ஹர்வல் பகுதியில் தனது கூட்டாளியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதேந்திர பல் மற்றும் அவரது கூட்டாளி பைக்கில் இருந்து இறங்கி தப்பியோட முயற்சித்தனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் இருவரையும் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சதேந்திர பல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு கொள்ளையன் தப்பிச்சென்றார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.


Next Story