குஜராத்: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


குஜராத்:  ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
x

குஜராத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2 வாரத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி போலீசார் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான பூஜ்ய சகிப்புதன்மை கொள்கை அடிப்படையில் போலீசார் கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்படி, அங்லேஷ்வர் பகுதியில் உள்ள ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 518 கிலோ எடை கொண்ட கொக்கைன் என்ற போதை பொருள் பறிமுதல் இன்று கைப்பற்றப்பட்டது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. கடந்த 1-ந்தேதி மஹிபால்பூர் பகுதியில், துஷார் கோயல் என்பவரின் குடோனில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில், 562 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் மரிஜுவானா ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றிய விசாரணையின் தொடர்ச்சியாக, டெல்லி ரமேஷ் நகரில் உள்ள கடை ஒன்றில் இருந்து, கடந்த 10-ந்தேதி 208 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், கைப்பற்றப்பட்ட இந்த போதை பொருளானது, பார்மா சொல்யூஷன் செர்வீஸ் என்ற மருந்து விற்பனை நிறுவனத்திற்கு உரியது என்பது கண்டறியப்பட்டது. இவை, ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்து வந்துள்ளது என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் இதுவரை ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான மொத்தம் 1,289 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் தாய்லாந்து மரிஜுவானா ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 2 வாரத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


Next Story