பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை


பெண் டாக்டர் பலாத்கார வழக்கு:  கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
x

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட தலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மொண்டல், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை கடந்த செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால், முதலில் எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அதன்பின்னரே, எங்களுடைய பணிநிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம். இல்லையெனில், மருத்துவமனைகளில் இன்று காணப்படும் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த நிலையில், வழக்கில் ஆர்.ஜி. கார் கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில், நிதி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அவரை கைது செய்திருந்தது. அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடத்தியது.

இந்நிலையில், பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில், சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் சி.பி.ஐ. இன்று கைது செய்து உள்ளது. இதனை தொடர்ந்து அபிஜித் மொண்டல், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளார். இந்த முடிவை ஸ்வஸ்தியா பவனில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை டாக்டர்கள் கைத்தட்டி வரவேற்றுள்ளனர்.


Next Story