கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு


கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
x

டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந்தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரும் கெஜ்ரிவாலின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் நிராகரித்தார்.

இதையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை வாதிடுகையில், 'செய்தியாளர் சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து தவறான கருத்துகளை கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது ஜாமீன் நிபந்தனைகளுக்கு எதிரானது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று கூறியது.

இதையடுத்து, நீங்கள் மீண்டும் சரண் அடையப் போகிறீர்களா? என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, எனக்கு எந்த நிவாரணமும் கோர்ட்டு வழங்கவில்லை எனில், வேறு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், சரணடைவேன்" என்று கெஜ்ரிவால் கூறினார்.இதையடுத்து, கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story