கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் எதிரொலி: குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

குடகு-

கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

'நிபா' வைரஸ்

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குடகு கலெக்டர் ஆலோசனை

இந்த நிலையில் கர்நாடகத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால், குடகு மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடகில் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை செய்யும்படி தெரிவித்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் இன்னும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. கேரள எல்லையில் இருப்பதால் குடகில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் குடகில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story