மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை


மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
x

கோப்புப்படம்

இது உங்கள் உத்தரபிரதேசம் அல்ல. மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ''சந்தேஷ்காலி பாலியல் சம்பவ குற்றவாளிகளை பாதுகாக்க அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

பாங்கான் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "மேற்கு வங்காளத்தில் உள்ள நிலவரம், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் உள்ளதை போன்றது அல்ல என்பதை பிரதமர் மோடி மனதில் கொள்ள வேண்டும். இது உங்கள் உத்தரபிரதேசமோ, மத்தியபிரதேசமோ அல்ல.

மேற்கு வங்காளத்து பெண்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் பெண்களை தொடாதீர்கள். அவர்களின் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் விளையாடாதீர்கள். மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ அமல்படுத்த விட மாட்டேன். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம், மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அது எனக்கு புரியவில்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் யாராவது விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டால், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ, பொது சிவில் சட்டத்தையோ அமல்படுத்த முடியுமா என்று சவால் விடுகிறேன். தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஆனால், மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். இங்குள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் பா.ஜனதாவுக்கு உதவி வருகின்றன.

பெண்களுக்கான மாநில அரசின் நிதியுதவி திட்டங்களை தடுத்து நிறுத்த பா.ஜனதா சதி செய்து வருகிறது" என்று அவர் பேசினார்.


Next Story