டாக்டர்கள் போராட்டம் எதிரொலி: ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் மாற்றம்


டாக்டர்கள் போராட்டம் எதிரொலி: ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் மாற்றம்
x

அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, இன்று (திங்கட்கிழமை) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8.00 முதல் 10.00 மணி வரை (வழக்கமாக காலை 8 மணி முதல் 11 மணி வரை) மட்டுமே நடைபெறும். அதாவது 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது. அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story