மத நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல்: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு


மத நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல்: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
x

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதாவது:- " முஸ்லீம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிப்பது மதத்தின் மற்றும் நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல். மகராஷ்டிரா அரியானா, தேர்தலுக்காகவே பிரத்யேகமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ் கண்டிக்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.


Next Story