போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 முறை தரிசனம் செய்த பக்தர் கைது


போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 முறை தரிசனம் செய்த பக்தர் கைது
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது.

திருமலை,

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் 20 முறை சாமி தரிசனம் செய்துள்ளார். அவரை கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது. அதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அதேபோல், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பக்தர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ர பாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ர பாத சேவை டிக்கெட்டை அதிகாரிகள் வாங்கி பரிசீலனை செய்தனர். ஆதார் அட்டையில் உள்ள முகமும், ஸ்ரீதரின் முகமும் ஒத்துப்போகவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் (விஜிலன்ஸ்) ஸ்ரீதரை பிடித்து விசாரித்தனர்.

அவர், போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டை பெற 400 முன்பதிவுகள் செய்திருப்பதும், அதில் 20 முறை சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை வாங்கி சாமி தரிசனம் செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், ஸ்ரீதரை பிடித்து திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளில் வேறு யாரேனும் அவருடன் இணைந்து மோசடி செய்திருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.


Next Story