பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு; மேலும் 2 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்


பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு;  மேலும் 2 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்
x

சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி அரசு அமைந்ததும், மூஸ்வாலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. இதற்கு அடுத்த சில தினங்களில் அதாவது கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் அன்கித் மற்றும் சச்சின் பிவானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேடப்படும் குற்றவாளிகளான இருவரும் லாரன்ஸ் பிஸ்னோய், சச்சின் பிவானி கும்பலை சேர்ந்தவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு கமிஷனர் எச்.ஜி.எஸ் தலிவல் கூறுகையில், " மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், அரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் எங்கள் தனிப்படை தீவிர சோதனைகளை நடத்தி வந்தது. கிடைக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் விடாமுயற்சியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். கைது செய்யப்பட்ட அன்கித்-தான் மூஸ்வாலாவை நெருங்கிச் சென்று துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். பிவானி, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கிறார்" என்றார். சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.


Next Story