டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!


டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!
x
தினத்தந்தி 7 Oct 2022 5:17 AM GMT (Updated: 7 Oct 2022 5:19 AM GMT)

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியின் கலால் கொள்கை 2021-22 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், இன்று மீண்டும் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்க இயக்குனரகம் இதுவரை 103க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியிருக்கிறது. மதுபான உற்பத்தி நிறுவனமான இண்டோஸ்பிரிட்டின் நிர்வாக இயக்குனர் சமீர் மஹந்த்ருவையும் அமலாக்க இயக்குனரகம் கடந்த மாதம் கைது செய்தது.

இந்த நிலையில், இன்று டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 35 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சில மதுபான வினியோகஸ்தர்கள், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சோதனையிடப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டெல்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story