'ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளேன்' - சம்பாய் சோரன்


ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளேன் - சம்பாய் சோரன்
x

ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவு செய்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் வரும் 30-ந்தேதி பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்-மந்திரியாக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் சம்பாய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்திருந்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில் சம்பாய் சோரன் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார்.

இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, "ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன், வரும் ஆகஸ்ட் 30-ந்தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டுவிட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன்" என்று தெரிவித்தார்.


Next Story