வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு - மத்திய அரசு


வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு - மத்திய அரசு
x

கடந்த 10 வருடங்களில் தமிழகத்தில் வெப்ப அலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

புதுடெல்லி,

கோடை வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிகமான உயிரிழப்புகளும், தமிழகத்தில் குறைவாகவும் உள்ளது என திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டிருந்தார். தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழியின் இந்தக் கேள்விக்கு மத்திய அறிவியல்-தொழில் நுட்பம் மற்றும் புவிஅறிவியல் துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) டாக்டர்.ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுதும் வெப்ப அலைகளால் 2013-ம் ஆண்டில் 1,216, 2014ல் 1248, 2015ல் 1908, 2016ல் 1338, 2017ல் 1127, 2018ல் 890, 2019 ல் 1274, 2020ல் 530, 2021ல் 374, 2022 ல் 730 பேர் மரணம் அடைந்தனர்.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும். கடந்த 10 வருடங்களில் 5 பேர்தான் தமிழகத்தில் வெப்ப அலைகளால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள், 2013ல் 418, 2014ல் 244, 2015ல் 654, 2016ல் 312, 2017 ல் 231, 2018 ல் 97, 2019ல் 128, 2020ல் 50, 2021ல் 22, 2022 ல் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (என்சிஆர்பி), உள்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கிய விவரங்கள் மூலமாக மேற்கண்ட தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது வெப்ப அலைகள் உள்பட தீவிர வானிலை நிகழ்வுகளின் போது உயிர் மற்றும் சொத்து இழப்பைக் குறைக்க உதவியது. பருவகால மற்றும் மாதாந்திரக் கண்ணோட்டத்தை வழங்குதல், அதைத் தொடர்ந்து வெப்பநிலை மற்றும் வெப்ப அலை நிலைகளின் நீட்டிக்கப்பட்ட வரம்பிற்கான முன்னறிவிப்பு பலன் தருகின்றன.

இந்தியா முழுவதும் மாவட்ட வாரியான வெப்ப அலை பாதிப்பு அட்லஸ் தயாரித்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு வழங்கி தகுந்த நடவடிக்கை எடுப்பதில் உதவுகின்றனர். தினசரி வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் வானிலை அபாய பகுப்பாய்வு, முழு நாட்டிற்கான ஹீட் இன்டெக்ஸ் முன்னறிவிப்பு மற்றும் மாவட்ட அளவில் வெப்ப அலை நிலைகளின் தாக்கம் சார்ந்த முன்னறிவிப்பும் வெளியாகி வருகிறது.

யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் பிளாட்பார்ம், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக தளங்கள் மூலமாக வெப்ப அலை பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைப் பரப்புதல் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் காலத்தில் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மாநிலங்களுக்கு, மாநில பேரிடர் மறுமொழி நிதி (எஸ்டிஆர்எப்) மற்றும் மாநில பேரிடர் தணிப்பு நிதி (எஸ்டிஎம்எப்) மூலம் நிதி ஆதரவு கிடைக்கும். நிதி உதவிக்காக மாநிலங்களிடமிருந்து கோரிக்கை இருந்தால், என்டிஆர்எப் மற்றும் என்டிஎம்எப் வழங்குவதற்காக, தொடர்புடைய வழிகாட்டுதல்களின்படி மத்திய அரசு அதை பரிசீலிக்கும்.

இவ்வாறு இணை மந்திரி பதிலளித்துள்ளார்.


Next Story