தோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது: நவீன் பட்நாயக் வேதனை


தோல்விக்கு  வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது: நவீன் பட்நாயக் வேதனை
x

வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என்று நவீன் பட்நாயக் கூறினார்.

புவனேஷவர்,

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்கின் வலது கரம் போல செயல்பட்டவர் வி.கே பாண்டியன்.

இதனால், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி. கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்தேன் என தெரிவித்தார்.


Next Story