மத்திய மந்திரி சோமண்ணாவின் மகன் உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு


மத்திய மந்திரி சோமண்ணாவின் மகன் உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு
x

மத்திய மந்திரி சோமண்ணாவின் மகன் உள்பட 3 பேர் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரிப்தி என்ற பெண் பெங்களூருவில் உள்ள சஞ்சய் நகர் காவல் நிலையத்தில், மத்திய ஜல் சக்தி துறை மந்திரி சோமண்ணாவின் மகன் அருண் உள்பட 3 பேர் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், திரிப்தியும், அவரது கணவர் மாதவராஜும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அரசாங்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்தபோது சோமண்ணாவின் மகன் அருண் தங்களுக்கு அறிமுகம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு அருணுடன் சேர்ந்து தனது கணவர் மாதவராஜ் ஒரு நிறுவனத்தை தொடங்கியதாகவும், அந்த நிறுவனம் நஷ்டமடைந்த நிலையில் மாதவராஜிடம் அருண் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் தனது கணவரின் பங்கை 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்ததோடு, நிறுவனத்தை பதிவு செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோசடி நடந்துள்ளதாகவும் திரிப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்தினரை அருண் அடியாட்களை வைத்து மிரட்டினார் என்றும், தனது கணவர் மாதவராஜை தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்கள் என்றும் திரிப்தி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய மந்திரி சோமண்ணாவின் மகன் அருண் உள்பட 3 பேர் மீது மிரட்டல், மோசடி, போலி கணக்குகளை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story