தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி


தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி
x

கோப்புப்படம்

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து ஏப்ரல் 11-ந்தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதாவின் சகோதரர் கே.டி.ராமராவ், உறுவினர் டி.ஹரீஷ் ராவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கவிதாவை சிறையில் சந்தித்தனர். சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இந்த சந்திப்பு நடந்தது. முன்னாள் அமைச்சர்களான பி. சபிதா இந்திரா ரெட்டி, சத்தியவதி ரத்தோட் ஆகியோர் கவிதாவை சில வாரங்களுக்கு முன்பு சிறையில் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். திகார் சிறையில் கவிதா மயங்கி விழுந்ததையடுத்து, சிறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு தகுந்த மருத்துவ உதவிக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


Next Story