பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்


பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்
x

கோப்புப்படம் 

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் 14 வயது மாணவன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

கடந்த மே மாதம் 2-ம் தேதி, டெல்லியில் உள்ள 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில் நேற்று காலையில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலையில் பள்ளிக்கு வந்த ஊழியர் மின்னஞ்சல்களை பார்த்தார். அப்போது நேற்று முன்தினம் இரவில் வந்த ஒரு மின்னஞ்சலில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விரைந்து வந்த போலீசார் பள்ளியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினான். அந்த மாணவன் மேலும் 2 பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறான். போலீசார் அவனை எச்சரித்து, பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கினர்.


Next Story