விவசாயிகள் போராட்டம் சர்ச்சை கருத்து: கங்கனாவுக்கு பா.ஜனதா கட்டுப்பாடு


விவசாயிகள் போராட்டம் சர்ச்சை கருத்து: கங்கனாவுக்கு பா.ஜனதா கட்டுப்பாடு
x

விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பா.ஜனதா கண்டித்துள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதாவின் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- அரியானா விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜனதா அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா எம்.பி கங்கனா ரனாவத் பேசியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா ரனாவத் பேசியுள்ளார். ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா ரனாவத் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்காள தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும். வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது என்று கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பா.ஜனதா கண்டித்துள்ளது. கங்கானாவின் கருத்துக்கும் பா.ஜனதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

கங்கனா ரனாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கங்கனா ரனாவத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு பஞ்சாப் மாநில பா.ஜனதாவின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹர்ஜித் கரேவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளின் நண்பர்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக வேலை செய்து வருகின்றனர். அதைத்தான் கங்கனாவின் கருத்தும் தற்போது செய்துள்ளது. மதம் சார்ந்த அமைப்பு மற்றும் மிக முக்கிய விவகாரங்களில் அவர் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.


Next Story