அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட உத்தரவு


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட உத்தரவு
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 17 Jan 2024 2:16 PM GMT (Updated: 18 Jan 2024 9:05 AM GMT)

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்காக பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணியை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்த கோவில் 225 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமாகவும், கலை நயமிக்கதாகவும் உள்ளது.

வட இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 22-ந் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து இந்து சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story