காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்


காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்
x

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணமடைந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பட்னிடாப் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராணுவத்தினர், பாதுகாப்புப்படையினர், ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியனர். பின்னர், பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நின்றநிலையில் பயங்கரவாதிகள் உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து தோடா மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தனர். பின்னர், இன்று காலை பயங்கரவாதிகள் - பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை மீண்டும் தொடங்கியது.

இரு தரப்பிற்கும் இடையே பல மணிநேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் ராணுவ அதிகாரி (ராணுவ கேப்டன்) வீர மரணமடைந்தார்.

அதேவேளை, பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story