சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்


சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்
x

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 8 ம் தேதியுடன் முடிவடைகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்திருந்தார். வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்திற்கு கடந்த 7 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைத்தார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டிஒய் சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவ.10 வரை இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.


Next Story