குளிர்பானத்தில் மயக்க மருந்து.. எச்.ஐ.வி. பாதித்தவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்


குளிர்பானத்தில் மயக்க மருந்து.. எச்.ஐ.வி. பாதித்தவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்
x

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து எச்.ஐ.வி. பாதித்தவருடன் நண்பர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தம்மேனஹள்ளி பகுதியில் 56 வயது ஆண் ஒருவர் வசித்து வருகிறார். தனியாா் தொண்டு நிறுவன ஊழியரான இவருக்கு எச்.ஐ.வி. நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது பற்றி அவர் யாரிடமும் கூறாமல், தனக்கு காச நோய் இருப்பதாக கூறி வந்துள்ளார். இவருக்கு சியாம் பட்டீல் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் ஆனார். அவருக்கும் தனது நண்பரான தனியார் தொண்டு நிறுவன ஊழியருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவன ஊழியரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதனால் தனியார் தொண்டு நிறுவன ஊழியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் சியாம் பட்டீலுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சியாம் பட்டீல், நண்பரை சந்திக்க 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சியாம் பட்டீல், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை நண்பரான தனியார் தொண்டு நிறுவன ஊழியருக்கு கொடுத்துள்ளார்.

அத்துடன் அவரது முகத்தில் மயக்க மருத்தையும் சியாம் பட்டீல் தெளித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவருடன், சியாம் பட்டீல் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் அவரது வீட்டில் இருந்த 88 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சியாம் பட்டீல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த தனியார் தொண்டு நிறுவன ஊழியர், தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தான் சியாம் பட்டீல், தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து மயக்கம் அடைந்தவுடன் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதும் அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சியாம் பட்டீலை வலைவீசி தேடிவருகின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்த நபரை மயக்கமடைய செய்து வலுக்கட்டாய ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு நகை-பணத்தை நண்பர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story