ஆந்திரா ரெயில் விபத்து; நிலைமை கட்டுக்குள் உள்ளது - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்


ஆந்திரா ரெயில் விபத்து; நிலைமை கட்டுக்குள் உள்ளது - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
x

மீட்பு பணிகள் குறித்த நிலவரத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 19-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ரெயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி நிலவரத்தை ஆய்வு செய்தார். ஆந்திர முதல்-மந்திரியிடம் பேசினேன். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்தார்.


Next Story