படுத்தபோது ஆண், எழுந்தபோது பெண்... தோழனின் திடுக்கிடும் சதி திட்டம் அம்பலம்


படுத்தபோது ஆண், எழுந்தபோது பெண்... தோழனின் திடுக்கிடும் சதி திட்டம் அம்பலம்
x

முஜாகித்திடம், உன்னை பெண்ணாக மாற்றி விட்டேன். நீ என்னுடனேயே இனி வாழ வேண்டும் என ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மன்சூர்பூரில் பேக்ராஜ்பூர் என்ற மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது. இதில், சஞ்சக் கிராமத்தில் வசித்து வரும் முஜாகித் (வயது 20) என்ற வாலிபர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்தபோது, அவர் பெண்ணாக மாறியிருக்கிறார். இதனை அறிந்து முஜாகித் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவருடைய ஆணுறுப்புகள் அகற்றப்பட்டு இருந்தன.

இது திட்டமிட்ட சதி என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். கட்டாய பாலின மாற்ற சிகிச்சை நடந்துள்ளது. இதற்கு ஓம்பிரகாஷ் என்பவரே காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி முஜாகித் கூறும்போது, ஓம்பிரகாஷ் என்னை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டினார். துன்புறுத்தினார் என கூறியுள்ளார். முஜாகித்துக்கு மருத்துவ பாதிப்பு உள்ளது என்றும் அதனால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொய்யாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடன் முஜாகித் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, மருத்துவ பணியாளர்கள் முஜாகித்துக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.

அடுத்த நாள் சுய நினைவு திரும்பியதும் முஜாகித்திடம், ஆணாக இருந்து பெண்ணாக மாறி விட்டாய் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

தொடர்ந்து முஜாகித் கூறும்போது, ஓம்பிரகாஷ் என்னிடம், உன்னை பெண்ணாக மாற்றி விட்டேன். நீ என்னுடனேயே இனி வாழ வேண்டும்.

வழக்கறிஞர் ஒருவரை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். கோர்ட்டு வழியே திருமணம் நடக்கும். உன்னுடைய தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவேன். உன்னுடைய பங்கில் உள்ள நிலம் என்னுடைய பெயருக்கு மாற்றப்படும். அதனை விற்று விட்டு, லக்னோ சென்று விடுவேன் என கூறினார் என்று முஜாகித் அதிர்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில், பாரதீய விவசாய சங்கம் சார்பில் அதன் தலைவர் சியாம் பால் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

சியாம் பால் கூறும்போது, மருத்துவமனையில் பெரிய அளவில் உறுப்பு கடத்தல் நடக்கிறது. ஒப்புதல் இல்லாமல் பாலின மாற்ற சிகிச்சைகள் நடக்கின்றன. இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

முஜாகித்தின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், அவருக்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

முஜாகித்தின் தந்தை கடந்த 16-ந்தேதி போலீசில் அளித்த புகாரின்பேரில், ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மருத்துவ பணியாளர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story