சிறுநீர் கழிக்க இறங்கிய வாலிபரிடம் கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை அபகரித்த கும்பல்


சிறுநீர் கழிக்க இறங்கிய வாலிபரிடம் கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை அபகரித்த கும்பல்
x

குருகிராமில் சிறுநீர் கழிக்க இறங்கிய வாலிபரிடம் இருந்து கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது.



குருகிராம்,


டெல்லியை சேர்ந்த நபர் அனுஜ் பேடி. இவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மதுபான கடையில் இருந்து, தனது வெள்ளை நிற மெர்சிடிஸ் ரக காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

அவர் வரும் வழியில், தீயணைப்பு நிலையம் மற்றும் ஆடி கார் ஷோரூம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, காரை சற்று ஓரத்தில் நிறுத்தி உள்ளார்.

அதன்பின்னர், கீழே இறங்கி சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக அவர் சென்றுள்ளார். திடீரென அவரது காரை மறித்தபடி ஹுண்டாய் கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அதில் இருந்து இறங்கியவர்கள் நேராக அனுஜிடம் சென்றுள்ளனர்.

அவரை கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், பின்பு அவரது மெர்சிடிஸ் காரை கடத்தி சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனுஜ், குருகிராம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் சந்தீப் குமார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள இடத்தில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை கைது செய்வோம் என கூறியுள்ளார்.


Next Story