தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு


தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
x

தற்போதைக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

என்றாலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story