பீகாரில் புனித நீராடியபோது நீரில் மூழ்கிய பக்தர்கள்: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு


பீகாரில் புனித நீராடியபோது நீரில் மூழ்கிய பக்தர்கள்: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
x

கோப்புப்படம்

பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகையின்போது புனித நீராடிய பக்தர்கள் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் 'ஜிவித்புத்ரிகா' என்ற பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து, குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் பீகாரில் நேற்று முன்தினம் 'ஜிவித்புத்ரிகா' பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து புனித நீராடினர். இதன்படி இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் என 15 மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் புனித நீராடியபோது பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 37 குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் மாயமானதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது.

இதனிடையே 'ஜிவித்புத்ரிகா' பண்டிகையின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


Next Story