கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு


கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:45 PM GMT)

சரகூருவில் கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் இறந்தவருக்கு திதி கொடுக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு

திதி கொடுக்க சென்றனர்

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா செங்கேடன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முகமது கபில் (வயது 42). இவரது மனைவி சவரா பானு (35). இவர்களது மகள் பானு (18). முகமது கபிலின் பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரை அப்பகுதியில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில், முகமது கபிலின் பாட்டிக்கு திதி கொடுக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கால்வாய் அருகே முகமது கபில், சவரா பானு, மற்றும் பானு ஆகிய 3 பேர் சென்றனர். அங்கு வைத்து முகமது கபிலின் பாட்டிக்கு திதி கொடுத்தனர். இதையடுத்து சவரா பானு, முகமது கபில், பானு ஆகியோர் கால்வாயில் கால் கழுவி கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பானு கால்வாயில் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது கபில் மகளை காப்பாற்ற கால்வாயில் குதித்தார்.

தண்ணீரில் மூழ்கினார்

இதில் பானு, முகமது கபில் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சவரா பானு கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவரே கால்வாயில் குதித்து பானு, முகமது கபிலை தேடினார்.

ஆனால் அவர்கள் 2 பேரும் கிடைக்கவில்லை. மேலும் சவரா பானு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சரகூரு போலீசாருடன் வந்தனர். இதையடுத்து அவர்கள் கால்வாயில் குதித்து பானு, முகமது கபில், சவரா பானு ஆகிய 3 பேரையும் பிணமாக மீட்டனர். பின்னர் 3 பேர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திதி கொடுக்க வந்த இடத்தில் தாய்- மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story