ஒரு வாரத்தில் 2-வது சம்பவம்; பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் உறுப்பினர் கைது


ஒரு வாரத்தில் 2-வது சம்பவம்; பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் உறுப்பினர் கைது
x

உத்தர பிரதேசத்தில் மாத தொடக்கத்தில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மொயீத் கான் மற்றும் அவருடைய வீட்டு வேலைக்காரர் இருவரும், பலாத்கார வழக்கில் சிக்கினர்.

கன்னோஜ்,

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. இதில் பேசிய 15 வயது சிறுமி, ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தலுக்கான முயற்சி நடக்கிறது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, உடனடியாக கன்னோஜ் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். சிறுமியை மீட்டனர். ஆபாச கோலத்தில் இருந்த நவாப் சிங் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், நவாப் சிங் யாதவை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

வேலை இருக்கிறது என கூறியதும், உறவுக்கார பெண்மணியுடன் அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், இது திட்டமிட்ட சதி என நவாப் சிங் யாதவ் கூறுகிறார்.

நவாப், அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் நெருங்கிய முன்னாள் உதவியாளராவார். எனினும், அவர் தங்களுடைய கட்சியின் உறுப்பினர் இல்லை என அக்கட்சி கூறியுள்ளது.

5 ஆண்டுகளாகவே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர், கட்சியின் தீவிர உறுப்பினர் இல்லை என அக்கட்சியின் கன்னோஜ் மாவட்ட தலைவர் கலீம் கான் கூறுகிறார்.

ஆனால் பா.ஜ.க. எம்.பி. சுப்ரத் பதக் கூறும்போது, அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே இதுபோன்ற சம்பவங்களில் அக்கட்சியினர் பிடிபட்டுள்ளனர். ஒருவேளை ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்து விட்டால் என்ன நடக்கும்? என கேட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மொயீத் கான் மற்றும் அவருடைய வீட்டு வேலைக்காரர் இருவரும், பலாத்கார வழக்கில் சிக்கினர். கானின் வீட்டில் வேலை செய்து வந்த 12 வயது சிறுமியை 2 மாதங்களாக கான் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டினார் என கானுக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது. கானின் சட்டவிரோத பேக்கரியை அயோத்தியா மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. உத்தர பிரதேசத்தில் ஒரு மாதத்திற்குள், ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து, பாலியல் வழக்கில் சிக்கியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story