திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 21 பேர் பா.ஜ.க.வுடன் தொடர்பு - நடிகர் மிதுன் சக்கரவர்த்தி


திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 21 பேர் பா.ஜ.க.வுடன் தொடர்பு - நடிகர் மிதுன் சக்கரவர்த்தி
x

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 21 பேர் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக நடிகரும்,பா.ஜ.க உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 21 பேர் எங்களோடு தொடர்பில் இருப்பதாக மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மிதுன் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "ஜூலையில் நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன். இன்னும் 21 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் என்னுடன் நேரடியாக தொடர்பில் உள்ளனர். சிறிது நேரம் காத்திருங்கள், எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். எனக்கு எதிர்ப்புகளை பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், நான் ஒரு முட்டாள் அல்ல, அதே தவறுகள் மீண்டும் நடக்காது என்று கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதன் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாது. மேலும் வருகிற 2024-ம் ஆண்டிற்க்குள் தனது ஆட்சியை இழந்து விடும். என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்களின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

"இது போன்ற அறிக்கைகள் மக்களை முட்டாள் ஆக்கும் முயற்சியாகும். இதற்கும் உண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற கருத்துக்கள் பா.ஜ.க. கட்சிக்குள் மேலும் பூசலை அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு இல்லை." என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.

கடந்த ஜீலையில், திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என மிதுன் சக்ரவர்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story