லட்சத்தில் ஒருவர் : உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு

உலகத்திலேயே கொரோவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
புதுடெல்லி
இந்தியாவில் நேற்று மட்டும் 14 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான 23 நாட்களுக்குள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பெருந்தொற்றாக மாறியுள்ள கொரோனாவின் தாக்கத்தால் நேற்று வரை 4,65,740 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் நேற்றைய கொரோனா தொற்று நிலவர அறிக்கையின்படி இந்தியாவில் இறப்பு விகிதமானது லட்சம் பேரில் 1 ஆக உள்ளது.
இந்த இறப்பு விகதமானது உலகளவில் 6.04 சதவீதமாகவும் இங்கிலாந்தில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் 36.30, ஜெர்மனியில் 27.32, பிரேசிலில் 23.68, கனடாவில் 22.48, ஈரானில் 11.53, ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களில் 56.39 சதவீத நபர்கள் குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story