அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
![அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை](https://img.dailythanthi.com/Articles/2019/Jan/201901301405021920_NDFB-chief-Ranjan-Daimary-14-others-convicted-in-2008-Assam_SECVPF.gif)
அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி அபரேஷ் சக்ரபர்த்தி கடந்த 28-ம் தேதி தீர்ப்பளித்தார்.
போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் 30-ம் தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி அபரேஷ் சக்ரபர்த்தி உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவர் தண்டனைக்கான காலத்தை இதற்கு முன்னர் சிறையில் கழித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story