விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறலாம் கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 1,389 மனுக்கள் பெறப்பட்டு 1,188 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
20.3.2022-க்கு முன்பு ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022-ந் தேதிக்குள்) மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
நிவாரணம் பெறலாம்
மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே கொரோனா தொற்று நோய் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story