நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்' படம் வெளியான தியேட்டரில் திரை கிழிப்பு


நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட் படம் வெளியான தியேட்டரில் திரை கிழிப்பு
x
தினத்தந்தி 13 April 2022 10:48 PM IST (Updated: 13 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்' படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களின் உற்சாகமிகுதியால் திரை கிழிந்தது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்' படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களின் உற்சாகமிகுதியால் திரை கிழிந்தது.
அலைமோதிய கூட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. நாகர்கோவிலில் 3 திரையரங்குகளில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டது. இந்த 3 தியேட்டர்களிலும் நேற்று அதிகாலையில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இந்த காட்சியை பார்க்க நள்ளிரவு முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் குவிய தொடங்கினர்.
அதிகாலையில் சிறப்பு காட்சியை விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி ரசித்தனர். மேலும் விசில் அடித்தபடியும், வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியவாறும் நடனமாடினர். ஆர்வமிகுதியில் சிலர் திரை கட்டப்பட்டுள்ள பகுதிக்கும் சென்று நடனமாடினார்கள்.
திரை கிழிந்தது
அப்போது ஒரு தியேட்டரில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரையின் முன்பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை இருக்கையில் வந்து அமருமாறு அறிவுரை கூறினர். அந்த சமயத்தில் ரசிகர்கள் அவசர, அவசரமாக இருக்கைக்கு செல்ல முயன்ற போது சிலர் தடுமாறி திரையின் மீது சரிந்து விழுந்தனர். இதனால் திரையின் சில இடங்களில் கிழிந்து சேதமடைந்தது. இதனால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து படம் திரையிடப்பட்டது. பின்னர் சிறப்பு காட்சி முடிந்து ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகு திரை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் பீஸ்ட் படம் தொடர்ந்து திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அனைத்து தியேட்டர்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Next Story