பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது


பாளையங்கோட்டை  மேடை போலீஸ் நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 21 Jun 2021 12:49 AM IST (Updated: 21 Jun 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது.

நெல்லை:
பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது.

மேடை போலீஸ் நிலையம்

பாளையங்கோட்டை நகரின் பெயருக்கேற்ப பாளையங்கோட்டை மையப்பகுதியில் கோட்டைகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. அதில் ஒன்று தற்போது அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது. மற்றொரு கோட்டையில் பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில் அருகில் உள்ள மேடை போலீஸ் நிலையமும் செயல்பட்டது.

இந்த மேடை போலீஸ் நிலைய கட்டிடத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, தீண்டாமை ஒழிப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் இயங்கின.
அந்த போலீஸ் நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மேடை போலீஸ் நிலையம் கவனிப்பாரற்று கிடந்தது. அங்குள்ள இரண்டு அறைகள் மோசமான நிலையில் உள்ளது. மேல் பகுதிக்கு செல்லும் கல்படிகளில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்தன.
மேடை போலீஸ் நிலைய பகுதியை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

புதுப்பிக்கும் பணி

இந்தநிலையில் கலெக்டர் விஷ்ணு நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல்கட்டமாக அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தொடங்கியது. மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம்ஆனந்த், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

பணிகள் முடிந்ததும் உடைந்த பகுதிகளை சீரமைப்பது, கட்டிட பராமரிப்பு பணி மற்றும் விளக்குகள், மேல் பகுதியில் சிறிய பூங்கா, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story