பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது


பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 14 May 2021 5:22 PM GMT (Updated: 14 May 2021 5:22 PM GMT)

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய ஆயக்கட்டு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. 

இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு 7 ¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு உள்ளது. 

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 

முதல் போகத்திற்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி முடிய 153 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நீர்இருப்பினை பொறுத்து அணையில் இருந்து 1,205 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story