திசையன்விளை அருகே பயங்கரம்: பள்ளிக்கூட மாணவி படுகொலை


திசையன்விளை அருகே பயங்கரம்: பள்ளிக்கூட மாணவி படுகொலை
x
தினத்தந்தி 17 Oct 2019 10:45 PM GMT (Updated: 17 Oct 2019 10:29 PM GMT)

திசையன்விளை அருகே பள்ளிக்கூட மாணவி படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள உவரி கூட்டப்பனையைச் சேர்ந்தவர் வினிஸ்டன். இவருடைய மனைவி வினிதா. இவர்களுடைய மகள் இளவரசி (வயது 12). இவள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று இளவரசி பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தாள்.

பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றாள். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடினார்கள். ஆனால், அவளை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வினிஸ்டன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் பகுதியில் இளவரசி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தாள். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், உவரி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையில் குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி கடற்கரை பகுதியை நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் உள்ளன. இதனால் அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு, உடலை பக்கத்து வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னரே சிறுமியின் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டப்பனை பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களில் ஒருவரை போலீசார் விடுவித்தனர். மற்றொரு வாலிபரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திசையன்விளை அருகே பள்ளிக்கூட மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story