பணகுடி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


பணகுடி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Sep 2019 9:45 PM GMT (Updated: 8 Sep 2019 8:21 PM GMT)

பணகுடி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

பணகுடி,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் லூத்தர் நகரை சேர்ந்தவர் சுகுமாறன் மகன் ஜெய் மாலுக் (வயது 27). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஜெய் மாலுக் தனது நண்பரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜெய் மாலுக் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஜெய் மாலுக் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் அம்பையை சேர்ந்த கனகசபை என்ற ராஜாவை (32) கைது செய்தனர்.

பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் பணகுடிக்கு சென்று கொண்டிருந்தார். பணகுடியை அடுத்த கல்லாத்து பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக நாராயணன் மீது மோதியது.

இதில் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் செட்டிகுளத்தை சேர்ந்த சிவராஜனை (20) கைது செய்தனர்.

Next Story