ஆலங்குளத்தில் பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத குழந்தை பலி


ஆலங்குளத்தில் பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத குழந்தை பலி
x
தினத்தந்தி 7 Sep 2019 9:45 PM GMT (Updated: 7 Sep 2019 8:28 PM GMT)

ஆலங்குளத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கவின் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை செல்வம் வெளியே சென்று விட்டார். முத்துலட்சுமி வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். கவின் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த பகுதியில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் கவின் தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான்.

இதற்கிடையே முத்துலட்சுமி தனது குழந்தையை காணாமல் தேடினார். அப்போது தண்ணீர் தொட்டியில் கவின் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story