தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்ற மனு அளிக்கலாம் - 12-ந்தேதி வரை அவகாசம்


தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்ற மனு அளிக்கலாம் - 12-ந்தேதி வரை அவகாசம்
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM (Updated: 3 Nov 2018 10:05 PM)
t-max-icont-min-icon

தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்றுவதற்கு மனு அளிக்கலாம். இதற்கு வருகிற 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தேனி,

2018-19-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த ஜூன் 13-ந்தேதி நடந்த மானியக் கோரிக்கையின் போது தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியை ஆங்கில உச்சரிப்பின் போது ‘ட்ரிப்ளிகேன்’ என்று உள்ளது. இதை ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களும் தமிழ் உச்சரிப்பை போன்ற ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமையும் வகையில் மாற்றப்பட உள்ளது.

இதற்காக ஆவணங்களின் அடிப்படையிலும், ஊர் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை ‘தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனி’ என்ற முகவரிக்கு வருகிற 12-ந்தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிந்துரை செய்யப்படும் ஊர் பெயர்கள் தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக்குழுவால் ஏற்கப்பட்டு வெளியிடப்படும். எனவே, தேனி மாவட்டத்தில் தமிழ் உச்சரிப்பு போன்று ஆங்கில உச்சரிப்பையும் மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்கள் குறித்த விவரங்களை மனுவாக அனுப்பி வைக்கலாம்.

இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.


Next Story