கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு


கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 28 Sep 2018 11:19 PM GMT (Updated: 28 Sep 2018 11:19 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஆந்திர அரசு வழங்கவேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது.

பூண்டி ஏரி வறண்டது

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2.253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

நீர்வரத்து இல்லாததாலும், கோடைவெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் இருப்பு இருந்த தண்ணீரும் வறண்டுவிட்டது. இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில்கொண்டு 2-வது தவணையாக ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர மாநில அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரிநீரை கிருஷ்ணா நதியில் திறந்துவிட்டனர். இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 300 அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

தமிழக எல்லையை வந்தடைந்தது

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. வினாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மரியஹென்ரி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் சுப்புராஜ், அரசு, உதவி பொறியாளர்கள் பிரதீஷ், பழனிகுமார், சதீஷ், பழனிகுமார், சண்முகம் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதிநீரை வரவேற்றனர். இந்த தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து பூண்டி ஏரியை சென்றடையும்.

பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Next Story