புதுவையில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை


புதுவையில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2017 11:00 PM GMT (Updated: 15 Feb 2017 11:07 PM GMT)

புதுவையில் சமாதானம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவையில் சமாதானம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சமாதானம் பேசுவதற்காக அழைத்து வெட்டிக் கொன்ற மற்றொரு ரவுடி உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி

புதுச்சேரி லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 32). பிரபல ரவுடி. அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இருவரும் நண்பர்கள். பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள். இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர்கள் இருவரும் மர்டர் மணிகண்டனின் உத்தரவை கேட்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு, கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

தகராறு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலபிரச்சினையில் வசூலான பணத்தை பிரித்துக் கொள்வதில் சுந்தருக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையொட்டி இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன்பின் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அப்போதும் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஒருவரை ஒருவர் பழிவாங்க திட்டம் தீட்டி வந்தனர். இந்தநிலையில் இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று மதியம் வழுதாவூர் சாலை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தது. அப்போது அங்கு சுந்தருக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முரளியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவரது கை, கழுத்து உட்பட உடல் முழுவதும் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முரளியின் உடலை ஒரு மோட்டார் சைக்கிளில் தூக்கி வைத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொக்குபார்க் அருகில் நடுரோட்டில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர் உள்பட 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் முரளியின் ஆதரவாளர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி மடுவுபேட் பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story