'திரௌபதி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு குறித்த அப்டேட்


திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படைப்பு குறித்த அப்டேட்
x

அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளதாக ‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

மோகன் ஜி மீது சாதிய முத்திரை குத்தப்பட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய சினிமா முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.


இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இந்த ஆடி பெருக்கு நன்நாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி" என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவின் புகைப்படத்தில் அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். அடுத்து இயக்கும் படத்தில் இவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story