10 மாதங்களில்... ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகை


The actress who increased her salary from Rs.40 lakh to Rs.10 crore in 10 months
x

தனது படங்களின் வெற்றி மற்றும் பட வாய்ப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை நடிகை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

பாலிவுட் நட்சத்திரங்களின் அதிர்ஷ்டம் எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. பல நட்சத்திரங்கள் ஒரே இரவில் தங்கள் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அவ்வாறு சம்பளத்தை சில மாதங்களுக்குள் பெரிய அளவில் உயர்த்திய நடிகை பற்றி தற்போது பார்க்க உள்ளோம். இவர் வசூலில் சாதனை படைத்த ஒரு படத்தில் சுமார் அரை மணி நேரம் நடித்து பிரபலமானார்.

தற்போது, இந்த நடிகை 10 மாதங்களில் தனது சம்பளத்தை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளார். அது வேறுயாரும் இல்லை அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரிதான்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த திரில்லர் படமான 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்த ஆண்டு வெளியான 'லைலா மஜ்னு'வில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்திற்காக திரிப்தி டிம்ரி ரூ.40 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, விக்கி கவுசல் ஜோடியாக 'பேட் நியூஸ்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்காக திரிப்தி டிம்ரி ரூ.80 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் தனது கட்டணத்தை ரூ.6 கோடியாக உயர்த்தியதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது திரிப்தி டிம்ரி தனது கட்டணத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது படங்களின் வெற்றி மற்றும் அடுத்தடுத்து வரும் பட வாய்ப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை நடிகை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, ராஜ்குமார் ராவுடன் இணைந்து 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Next Story