ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு நடிக்கிறேன், ஆனாலும்... - சோனாக்சி சின்ஹா


சம்பள விஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.
x
தினத்தந்தி 18 May 2024 2:09 AM GMT (Updated: 18 May 2024 3:31 AM GMT)

தகுதிக்கான சம்பளத்தை பெறுவதில் கதாநாயகிகள் போராட வேண்டி இருக்கிறது என்று நடிகை சோனாக்சி சின்ஹா கூறினார்.

சென்னை,

பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சோனாக்சி சின்ஹா நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

"கதாநாயகர்கள் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்கள். ஆனால் கதாநாயகிகள் சம்பளத்தை மட்டும் பேரம் பேசி குறைக்க சொல்கிறார்கள்.

தகுதிக்கான சம்பளத்தை பெறுவதில் கதாநாயகிகள் போராட வேண்டி இருக்கிறது. நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருகிறார்கள். ஆனால் சம்பள விஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.

நான் ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு நடிக்கிறேன். ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன. நடிகையாக அந்த படங்களில் எனது கதாபாத்திரங்களை ரசித்து நடித்தும் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை. படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன என்று புரியவில்லை. வெற்றி நம் கையில் இல்லை'' என்றார்.


Next Story