சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் : தெலுங்கானா மந்திரிக்கு நாகார்ஜுனா கண்டனம்


சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் : தெலுங்கானா மந்திரிக்கு நாகார்ஜுனா கண்டனம்
x
தினத்தந்தி 3 Oct 2024 3:06 AM GMT (Updated: 3 Oct 2024 4:50 AM GMT)

தெலுங்கானா மந்திரி சுரேகாவின் சர்ச்கைக்குரிய பேட்டிக்கு நடிகர் நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.

அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கொண்டா சுரேகா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில், சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதில் 'சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி ராமா ராவ் தான் காரணம் என்று கூறியுள்ளார். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள்' எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்தநிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்தப் பேட்டிக்கு நடிகர் நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நாகார்ஜுனா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மந்திரி கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story